11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 30 நவம்பர், 2022

குலதெய்வ வழிபாடு.

 குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்க கூடாது. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.

குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு!குலதெய்வ வழிபாடு கோடி தெய்வங்களை வழிபடுவதற்கு சமனாகும். எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

குலதெய்வத்தை வணங்குங்கள் உங்கள் வம்சத்தை காக்க முதலில் வருவது குலதெய்வம் தான். வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக மிக முக்கியம்.

நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். அவை கர்மவினைகளை நீக்க வல்லவை. நமக்கு எளிதில் அருளினைத் தரக் கூடியவை. 


குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புனித ஆத்மாக்கள் ஆகும். இந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அறுகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள்கூடக் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

குலதெய்வம் மனிதன் இல்லற வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது. குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது.

குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் குலதெய்வம் மட்டுமே நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீக வழிகளில் முயற்சி செய்து பார்த்த மகான்கள் சொல்லும் உண்மை.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பது. குலதெய்வ வழிபாட்டை மறப்பது பெற்ற தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.

குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது. குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்களை பெறலாம்.

குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றினால் பலன்கள் எதுவும் கிடைக்காது! குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும். துன்பமான நேரத்தில் நம் தாய் எம்மை காப்பது போல குலதெய்வம் காக்கும்.

நாள் செய்யாததை கோள் செய்யும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும். குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விடயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் இருங்கள்.

ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.

 குலதெய்வத்திடம் அன்பு காட்டும் இடத்தில் குழந்தை மட்டுமல்ல, தெய்வமும் இருக்கும் என்பது பழமொழி, ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும், தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.

குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்! குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரமனின் வழிபாடு என்பதினால் தான், குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரமனை அவமதிப்பதாகும். அதனால் அந்தக் குற்றம் கடுமையான குற்றமாக கருதப்படும். அதனால் பல ஜென்மங்களுக்கு தண்டனை கிடைக்கிறது.

நாம் நம் குல தெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள் இன்னல்கள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

உங்கள் வீட்டிலேயே குல தெய்வத்தை வைத்து அலங்கரித்து, பாரம்பரிய வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

நீங்கள் ஒரு வேளை குலதெய்ல வழிபாட்டை மறந்து இருந்தால் முதலில் மீண்டும் தொடங்குங்கள், வேறு எந்த தெய்வமும் அதற்கு இணையாக இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.