11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 5 ஜனவரி, 2022

இலங்கையில் மட்டக்களப்பு தமிழா்கள் நிர்வாக பயங்கரவாதிகள் என்று சோனகா்கள் பிரகடணம்.

 இலங்கையின் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள் நிர்வாகப்பயங்கரவாதம் என்ற ஒரு புதிய அடையாளத்தை கிழக்கு மாகாண தமிழா்கள் மீது அடையாளப்படுத்தி உள்ளாா்கள்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காபிர் நசீர் அவர்கள் நாடாளுமன்றத்திலும் தொலைக்காட்சி விவாதத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களாக இருக்கும் நிர்வாக அதிகாரிகள் நிர்வாக பயங்கரவாதிகள் என்றும் மாவட்ட செயலகங்களிலும் பிரதேசங்களிலும் நிர்வாக பயங்கரவாதம் நிலவுகிறது என சொல்லியிருந்தார்.

டிசம்பர் 30ஆம் திகதி ஓட்டமாவடி பிரதேச சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முக்கியமானவை.

1. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக பயங்கரவாதம் நிலவுகிறது.

2. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும் உயர் அதிகாரிகளாகவும் சிங்களவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

3. வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் நான்கு தசாப்பத காலமாக யுத்த சூழலை பயன்படுத்தி தமிழர்களை சிறுபான்மை ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் தான் எஞ்சியிருக்கிறது. ஆனாலும் சனத்தொகை மற்றும் அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

2011ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 72.61வீத தமிழர்களும் 25.49 வீத முஸ்லீம்களும் வாழ்வதாக புள்ளிவிபர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரானா காரணமாக திட்டவட்டமான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றாலும் வருடா வருடம் மாவட்ட செயலகம் நடத்தும் அண்ணளவான கணிப்பின் படி தமிழர்களின் சனத்தொகை வீதம் 69 சத வீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை முஸ்லீம்களின் சனத்தொகை வீதம் 28 சதவீதமாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

வீடு வீடாக சென்று சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் சில வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் சனத்தொகை வீதம் இதை விட குறையலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் திணைக்களம் உட்பட பல திணைக்களங்களில் திணைக்கள தலைவர்களாக முஸ்லீம்களே அண்மைக்காலத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட நில அளவை திணைக்களம் முழுமையாக முஸ்லீம் அதிகாரிகளை கொண்டதாகவே மாற்றப்பட்டிருக்கிறது. இது ஹிஸ்புல்லா காலத்திலிருந்து செய்யப்பட்ட வேலை. தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இதனை கவனிக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கெங்கு அரச காணிகள் இருக்கிறது. எங்கே பராமரிக்காமல் உரிமை கொண்டாடாமல் தரிசாக நிலங்கள் இருக்கிறதோ அவற்றை இனங்கண்டு முஸ்லீம்களை குடியேற்றும் நடவடிக்கைகள் திட்டமிட்ட ரீதியில் 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. முக்கியமாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெற்று வந்தன.

வெலிக்கந்தை நகரில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கு வந்தால் அதிலிருந்து ஓட்டமாவடி வரை முழுமையாக முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பெருந்தொகையான காணிகளை உள்ளடக்கி ஹிஸ்புல்லாவினால் தனியார் பல்கலைக்கழகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை சுற்றி குடியேற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இதன் உச்சக்கட்டமாகத்தான் இப்போது வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புனானை கிழக்கு உட்பட சில கிராம சேவையாளர் பிரிவுகளை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கும் வேலைகளை முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். 

புனானை கிழக்கு உட்பட அப்பிரதேச தமிழ் சிங்கள மக்கள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்து தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

1994ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த அரசாங்க ஆட்சி வரை முஸ்லீம் அமைச்சர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். புனர்வாழ்வு அமைச்சு உட்பட பலம் பொருந்திய அமைச்சு அவர்களின் கைகளில் தான் இருந்தது.

அழிந்தது தமிழர் பிரதேசம். அபிவிருத்தி அடைந்தது முஸ்லீம் பிரதேசம். மட்டக்களப்பின் வர்த்தகம் முழுமையாக முஸ்லீம்களின் கைகளுக்கு மாறியது.

1980ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையான 40 வருடத்தில் மட்டக்களப்பு வர்த்தகம் எப்படி கைமாறி போயிருக்கிறது என்பதை தெளிவாக பார்க்க முடியும்.

புளியந்தீவில் 1980களில் 5 வீதமான கடைகள் தான் முஸ்லீம்களிடம் இருந்தது. 95 வீதமான கடைகள் தமிழர்களின் வசம் இருந்தது. நகைக்கடைகள் நூறு வீதம் தமிழர்களிடம் தான் இருந்தது. ஆனால் இப்போது 10 வீதமான நகைக்கடைகள் கூட தமிழர்களிடம் இல்லை. 90 வீதத்திற்கு மேல் முஸ்லீம்களிடம் தான் இருக்கிறது.

தமிழ் பெயர்களில் நகைக்கடை இருக்கும். உள்ளே சென்று பார்த்தால் முஸ்லீம்கள் தான் அதன் உரிமையாளர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நகைக்கடைகளின் பெயர்பட்டியல் என்னிடம் இருக்கிறது. நகைக்கடையின் ஏகபோக மொத்த விற்பனை உரிமை மொடேர்ன் யுவலரி என்ற முஸ்லீம் வர்த்தகரிடம் தான் இருக்கிறது.

புடவை கடை இரும்புக்கடை, பலசரக்கு கடை பான்சி பலஸ் என அனைத்தும் முஸ்லீம்களிடமே உள்ளது.2004ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு கோட்டமுனை வெள்ளைப்பாலத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை தமிழர்களுக்கு சொந்தமான கடைகளே இருந்தன.

பரமேஸ்வரி ஸ்ரோர்ஸ், இராசேஸ்வரி ஸ்ரோர்ஸ் தொடக்கம் சின்னாஸ்பத்திரி வரை தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் தான் இருந்தது. நான் அறிய அஜந்தா ரேடர்ஸ் என்ற ஒரே ஒரு கடைதான் சக்தி நூல் நிலையத்திற்கு அருகில் இருந்தது.

ஆனால் இன்று பரமேஸ்வரி ஸ்ரோர்சும் இல்லை, இராசேஸ்வரி ஸ்ரோர்ஸ்சும் இல்லை. முழுக்க முழுக்க காத்தான்குடி முஸ்லீம்களுக்கு சொந்தமான புடவை கடைகளும் எலக்ரிக்கல் கடைகளும் பான்சி பலஸ் கடைகளும் தான் காணப்படுகிறது. 

இரண்டு மூன்று சாராயக்கடைகள் மாத்திரம் தமிழர்களின் கைகளில் இருக்கிறது. குடிச்சு செத்து அழிஞ்சு போங்கடா என்பதற்காக.......மட்டக்களப்பு வர்த்தகம் தமிழர்களின் கைகளை விட்டு போவதற்கு 108 தமிழ் ஆயுக்குழுக்களும் காரணம். 

தமிழ் வர்த்தகர்களை கடத்தி சென்று அவர்களால் தாங்க முடியாத அளவிற்கு கப்பம் பெற்றால் என்ன செய்வார்கள். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என முஸ்லீம்களுக்கு கடைகளை விற்று விட்டு உயிரை காப்பாற்ற என ஓடித்தப்பி விட்டார்கள்.

மட்டக்களப்பின் வர்த்தகம் முஸ்லீம்களிடம் முழுமையாக போய்விட்டது. அரச நிர்வாகமும் படிப்படியாக முஸ்லீம்களிடம் சென்று கொண்டிருக்கிறது.  இப்போது நிர்வாக பயங்கரவாதம் என சொல்லி  எஞ்சி இருக்கும் தமிழ் அதிகாரிகளை கலைத்து விட்டு முஸ்லீம்களையும் சிங்களவர்களையும் நியமிப்பதற்கான வேலைகளை முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒரு கட்டம் தான் கடந்த 30.12.2021 அன்று ஓட்டமாவடி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகத்தையும் கைப்பற்றி விட்டால் எஞ்சி இருப்பது தமிழர்களுக்கு உரிய நிலங்கள் தான்.

அதனை பறிப்பதற்கான வேலைகளை அவர்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.இதனை தடுப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலாவது தமிழர்களின் இருப்பை தக்க வைத்து கொள்வதற்கு தமிழ் அரசியல்வாதிகள், தமிழர் நலன்சார்ந்த பொது அமைப்புக்கள் துறைசார் நிபுணர்கள் பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்பட போகிறீர்களா?

அல்லது உங்கள் சுயநல அரசியலுக்காக பிரிந்து நின்று நாய் கடி பூனை கடி என சண்டை பிடித்து அழிந்து போகப்போகிறீர்களா?

முடிவெடுக்க வேண்டியது தனியே அரசியல்வாதிகளின் கைகளில் மட்டுமல்ல தமிழர் நலன்சார்ந்த பொது அமைப்புக்கள் தமிழ்  உணர்வாளர்களின் கைகளிலும் தான்  தங்கி இருக்கிறது.

காலம் தாழ்த்தாது முடிவெடுங்கள்.இல்லை என்றால் அழிந்து போவீர்கள். இது சாபமல்ல..... உங்கள் எங்கள் எதிர்கால சந்ததிக்காக........இரா.துரைரத்தினம். ஊடகவியலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.